பாப்ரி மஸ்ஜித்:20 ஆண்டுகளாக ஓடி ஒளியும் மதசார்பின்மை

இந்தியாவின் வரலாற்றில் அதுவும் நிகழ்ந்தது. ஓநாய்கள் காவலர்களாக மாறிய கொடூரமான தருணம்.

மனிதர்களும், காலமும்  நாகரீக காலக்கட்டத்தில் இருந்து இருண்ட காலத்திற்கு பின்னோக்கி சஞ்சரித்தனர். தேசத் தந்தையின் மார்பில் கோட்ஸே துப்பாக்கி குண்டுகளால் துளைத்ததும், மதசார்பற்ற இந்தியாவின் வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதின் குவி மாடங்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் இடித்துத் தள்ளப்பட்டதும், கர்ப்பிணியின் வயிற்றை சூலத்தால் கிழித்து சிசுவை எடுத்து தீயில் பொசுக்கியது உள்ளிட்ட மாபெரும் இனப்படுகொலையும்  மதசார்பற்ற, ஜனநாயக தேசம் என பெருமைப்பேரும் இந்தியாவில் தான் அரங்கேறின.

உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத்திற்கு அருகே அயோத்தியில் ஸரயு நதிக்கரையில் இந்தியாவின் முதல் முகலாய பேரரசரான ஸஹீருத்தீன் முஹம்மது பாபரின் உத்தரவின் பேரில் அவரது ஆளுநர் மீர்பாகி தாஷ்கந்தி 1527-ஆம் ஆண்டு கட்டிய பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவுறுகிறது.

பல்வேறு மதங்களும், பண்பாடுகளும் கொண்ட விசாலமான மதசார்பற்ற தேசம் என்ற பிம்பம் பாபரி மஸ்ஜிதின் இடிப்பு மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சுக்கு நூறாய் சிதறிப் போனது. மதசார்பற்ற இந்தியாவிற்காக கடுமையாக பாடுபட்ட தேசத்தந்தை காந்தியடிகளை கொலைச் செய்த கொலைக்கார பாசிச கும்பல் தான் பாப்ரியையும் இடித்து தள்ளியது.

சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன சிற்பியான பாபா சாகேப் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த தினமான டிசம்பர் 6 ஆம் நாளை ஏன் சங்க்பரிவார தீவிரவாதிகள் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு தேர்ந்தெடுத்தார்கள் என்பது ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய விஷயமாகும்.

தாழ்த்தபட்ட சமூகத்தில் பிறந்த அம்பேத்கரின் பன்முக ஆளுமையும், வாழ்வும், நிலைப்பாடுகளும் இந்தியா முழுவதும் செல்வாக்கை பெற்றுத் தந்தது. இது உயர்ஜாதி பாசிச சக்திகளின் உள்ளங்களில் என்றைக்குமே வெறுப்பையும், பகைமையையும் வேரூன்றி வளரச் செய்தது. தலித்துகளும், சிறுபான்மையினரும் அடங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் அம்பேத்கர். இந்தியாவில் தலித்-சிறுபான்மை கூட்டணி வலுப்பெற்று அதிகாரங்கள் அவர்களின் கரங்களில் செல்வதை தடுக்கவேண்டும் என்றால், அம்பேத்கர் என்றென்றைக்கும் மக்கள் மனதில் இருந்து காணாமல் போகவேண்டும் என்பதை பாசிச உயர்ஜாதி கும்பல் விரும்பியது. ஆகவே அவரது நினைவு நாளில்  முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமும், இந்தியாவின் வரலாற்றுச் சின்னமுமான பாபரி மஸ்ஜிதை இடித்து தள்ளி  உணர்ச்சி கொந்தளிப்பில் முஸ்லிம்களை கட்டிப்போட வேண்டும் என்று பாசிச கும்பல் திட்டமிட்டது. ஆகையால் டிசம்பர் 6, 1992-ஆம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டது பாபரி மஸ்ஜித் மட்டுமல்ல, இந்தியாவில் தலித்-சிறுபான்மை சமூகத்தை சக்திப்படுத்துதலின் கனவுகளும் சேர்ந்தே தகர்க்கப்பட்டன.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு சரியாக 10 ஆண்டுகள் கழித்து குஜராத்தில் இந்திய வரலாறு காணாத கொடூரமான இனப்படுகொலை சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. பாபரி மஸ்ஜித், அரசின் மவுன சம்மதத்தோடும், ரகசிய ஆதரவுடனும் இடிக்கப்பட்டது என்றால், மாநிலத்தை ஆளும் முதல்வரின் தலைமையில் தேசத்தின் அரசியல் சாசனத்தையும், நீதிமன்றங்களையும், ராணுவத்தையும் பார்வையாளர்களாக மாற்றி பகிரங்கமாக இன அழித்தொழிப்பு குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது.

தாய் நாட்டின் மீதான அளவற்ற பற்றுதான் இத்தகைய கொடிய செயல்களுக்கெல்லாம் காரணம் என்று சங்க்பரிவார் எப்பொழுதுமே பெருமை பேசுவதுண்டு. ஆனால், ஐந்து ஆண்டுகள் நாட்டை ஆளும் வாய்ப்பு எதிர்பாராத விதமாக கிடைத்த பொழுது சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.கவின் அவலட்சணமான தேசப்பற்றை இந்த தேசம் கண்டது. நாட்டின் எதிரிகளுக்கு எதிராக உயிரை கொடுத்து போராடிய ராணுவத்தினருக்கு வாங்கிய சவப்பெட்டியில் கூட ஊழலை புரிந்துதான் சங்க்பரிவாரம் தேசப்பற்றை வெளிப்படுத்தியது. பின்னர் வீதிகளில் போலி என்கவுண்டர்கள் மூலம் அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொலைச் செய்துவிட்டு தேசப்பற்றை தொடர்ந்து நிரூபித்து வந்தனர்.

அஜ்மீர், ஹைதராபாத், நந்தித், மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், கோவா என தொடர்ந்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி தேச மக்களை பீதியில் ஆழ்த்தி தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள் சங்க்பரிவாரத்தினர். இதன் பெயரால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கறுப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டு இன்றைக்கும் தங்களின் வாழ்க்கையை சிறைச்சாலைகளில் தொலைத்து வருகின்றனர். குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங்க்பரிவாரத்தின் உண்மை முகம், கர்னல் புரோகித், சுவாமி அசிமானந்தா போன்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வாயிலாக வெட்ட வெளிச்சமானது.

விஷம் தோய்ந்த தத்துவங்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட சங்க்பரிவார்கள், இத்தகைய உண்மையை வெளிக்கொணரும் விசாரணைகளை இனி யாரும் மேற்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தனர். அதன் விளைவாக, ஹேமந்த் கர்காரே உள்ளிட்ட நேர்மையான போலீஸ் அதிகாரிகள் கொலைச் செய்யப்பட்டனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் முடிவுறும்போது அயோத்தியில் இருந்து ஹைதராபாத்தின் சார்மினாரை நோக்கி தங்களது கட்டுக்கதைகளின் ரதத்தை திருப்பியுள்ளனர். பிறந்த நாட்டின் விடுதலைக்காக உயிரையும், சொத்துக்களையும் தியாகம் செய்த முஸ்லிம்களின் வாழ்க்கையை சீர்குலைக்கவும், அடக்கி ஒடுக்கவும் சூழ்ச்சிகள் ஒரு மதசார்பற்ற தேசத்தில் அரங்கேறும் பொழுது அதற்கு எதிராக தீரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசு மற்றும் நீதிபீடங்களின் அடிப்படை கடமையாகும்.

இது ஒரு சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. மாறாக மதசார்பின்மை என்ற விசால பார்வை கொண்ட தேசத்தின் கழுத்தில் கடப்பாறையை செருகும் தீவிர பிரச்சனையாகவே அரசியல் கட்சிகளும், மதசார்பற்ற கொள்கையிலும், நீதியிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

இல்லையெனில் ஹிட்லரின் ஆட்சியைப் பற்றி  கவிஞர் மார்டின் நிமோலர் கூறியது போல  ‘கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள் எனக்காகப் பேச அப்போது யாருமே இல்லை’ என்ற நிலைதான் நமக்கு ஏற்படும்.

அ.செய்யது அலி.

Related

முக்கியமானவை 7855931886129511220

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item