ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் புதிய அமைப்பு!

இந்த அமைப்புக்கு சென்னை மயிலை பேராயர் ஏ.எம். சின்னப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைப்புக் குறித்து பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல்வேறு மதத் தலைவர்கள் அடங்கிய அமைப்பை துவங்கியுள்ளோம். இலங்கையில் போருக்குப் பின்னால் தமிழர்களின் பகுதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்ற அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவேயில்லை. மாறாக தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் ராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வெளிநாடுகளின் உதவியோடு கட்டப்படும் வீடுகளைக் கூட சிங்களர்களுக்கு கொடுக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் 2,000க்கும் அதிகமான இந்து கோவில்கள், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஐ.நா. சபையும், மத சுதந்திரத்தை பாதுக்காக்க நிறுவப்பட்ட ஆணையமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.