இஸ்ரேலில் சுனாமியின் எச்சரிக்கை

“நாம் தென் ஆஃப்ரிக்கா போல மாறப்போகின்றோம்; பொருளாதாரத் தடை கல்லை ஒவ்வொரு இஸ்ரேலிய குடும்பமும் உணரப்போகிறது” என்றார் மிகப்பெரும் வியாபாரப் புள்ளியான இடாம் ஒஃபர். கடந்த மே மாதம் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வர்த்தக பெரும்புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த வர்த்தக முதலைகளின் முக்கிய கவலை என்னவெனில், வரும் செப்டம்பர் மாதம் (2011)  பலஸ்தீன்  ஆணையம், ஐ.நா சபையின் பொதுக் குழுவில் பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என குரல் எழுப்பப்போகிறது என்பது தான்.

“பலஸ்தீன் அரசை ஐ.நா சபை அங்கீகரித்த மறு நாள் காலை மிகவும் வருந்தத்தக்க வகையில்,  வலியை உணரக்கூடிய அளவில் “தென் ஆஃப்ரிக்காமயமாக்கல்” துவங்கிவிடும் என்று அக்கூட்டத்தில் உரையற்றிய ஐ.நா சபைக்கான முன்னாள் இஸ்ரேலியத் தூதர் டான் கில்லர்மோன் சோக உரையாற்றினார். அதாவது, “உலகளாவிய பொருளாதார தடைகளை இஸ்ரேல் சந்திக்க நேரிடும்” என்று கூறி அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கவலையில் உறைய செய்தார்.

இந்த கூட்டத்திலும், இதற்கு அடுத்து நடந்த கூட்டங்களிலும் கலந்து கொண்ட வர்த்தக முதலைகள், சவூதி அரேபியா (அரபு லீக்)  மற்றும் அதிகாரப் பூர்வமற்ற 2003 ஜெனிவா ஒப்பந்த மாதிரி திட்டங்களின் அடிப்படையிலான ஒரு மாதிரி திட்டத்தை உருவாக்க  இஸ்ரேலிய அரசை வலியுறுத்தினார்கள்.

கடந்த மார்ச் மாதம் இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர்  யஹூத் பராக், ஐ.நா. சபையின் செயலை “சுனாமி“ என்று வர்ணித்தார். இஸ்ரேலுக்கு ஏன் இந்த அச்சம்? ஐ.நா. சபையின் பொதுக்குழு “பலஸ்தீன் ஆணையத்தை பலஸ்தீன் அரசாங்கமாக அங்கீகரித்துவிட்டால் வெறுமனே சர்வதேச சட்டத்தை மீறும் இஸ்ரேலின் அத்துமீறலை மட்டும் உலகம் கண்டிக்காது, மாறாக ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு நாட்டின் மீது அநியாயமாக ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம் சாட்டும்.

இந்தச் சுனாமியைத் தடுக்கவே இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்களது தூதரகங்கள் மூலமாக இராஜதந்திர பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன. இந்த இராஜ தந்திரங்கள் அனைத்தும் தோல்வியடைந்து போனால் பலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் சூழல் உருவாகும்.

100-ற்கும் மேற்பட்ட உலக நாடுகள் பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளன. பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தங்களது தூதரக அலுவலகங்களின் வேலைகளை அதிகரித்து தங்கள் நாட்டு தூதரகங்களை திறந்து வருகின்றன. “இது வழக்கமாக ஒரு நாட்டிற்கு மட்டுமே கடைபிடிக்கப்படும்“ என்று அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் இன்டர்நேஷனல் லாவன் விக்டர் கட்டன் கூறுகிறார்.

அமெரிக்காவின் பொருளாதார உதவிக்காக பயந்து கொண்டிருந்த ஐ.நா. சபை, தற்பொழுது யுனெஸ்கோ மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) களில் மட்டும் பங்கெடுத்து வந்த பலஸ்தீனை ஐ.நாவிலும் பங்கெடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

“ஐ.நாவில் அங்கீகாரம் பெறும் முயற்சியை கைவிடவில்லையென்றால் பலஸ்தீன் ஆணையத்திற்கு (PA) அமெரிக்கா வழங்கும் பொருளாதார உதவியை தடை செய்ய வேண்டும்” என்ற தீர்மானத்தை அமெரிக்கா செனட் கடந்த ஜுன் மாதம் முடிவெடுத்தது. ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் பலஸ்தீனை ஒரு தனி நாடாக அறிவிப்பதை விட அமெரிக்கா ஐ.நா. விற்கான உதவிப்பணத்தை நிறுத்துவது மிகவும் பயங்கரமானது அல்ல என்று ஐ.நா. விற்கான அமெரிக்கத் தூதர் சூஸன் ரைஸ் எச்சரிக்கிறார்.

“பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்தால, அது போருக்கும் வன்முறைக்கும் இட்டுச் செல்லும்“ என்று ஐ.நா. விற்கான இஸ்ரேலின் புதிய தூதர் ரான் ப்ரோசர் எச்சரிப்பதாக லண்டனின் டெய்லி டெலிகிராஃப் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

மேற்கு கரை (வெஸ்ட் பேங்க்), காஸ்ஸா உட்பட கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றை சேர்த்து பலஸ்தீன் என்று ஒரு தனி நாடாக அங்கீகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1981 ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்பு சபையின் உத்தரவுகளுக்கு எதிராக இஸ்ரேல் இந்த கோலன் ஹைட்ஸை தன்னுடன் இணைத்து கொண்டது.

மேற்கு கரையில் (வெஸ்ட் பேங்க்) இஸ்ரேல் கட்டிவரும் குடியிருப்புகளுக்கு ஆதரவளிப்பதும், அவர்களுக்காக உதவுவதும் சர்வதேச சட்டத்திற்கு எதிரானது ஆகும். சர்வதேச நீதிமன்றம் (World Court) மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையும் எதிர்த்தும் கூட அவற்றை புறக்கணித்து இஸ்ரேல் தனது பணியைத் தொடர்ந்து வருகின்றது.

பலஸ்தீனில் நடைபெற்ற ஜனநாயகரீதியாக நடத்தப்பட்ட நேர்மையான தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்ற உடன் இஸ்ரேலும், அமெரிக்காவும் 2006-பிப்ரவரியில் காஸ்ஸா பிரதேச முற்றுகையை நடத்தியது. (காஸ்ஸாவிற்கான அனைத்துவிதமான அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வழிகளை அடைத்ததன் முதல் காஸ்ஸாவை வெளியுலகில் இருந்து தனிமைப்படுத்தியது). தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவ சதி மூலம் தூக்கியெறிய நடத்திய முயற்சி தோல்வியடைந்ததுடன் ஜுன் 2007-ல் முற்றுகையை அதிகரித்தது.

அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக எப்பொழுதுமே அறிக்கையை வெளியிடாத செஞ்சிலுவை சங்கமே, ஜுன் 2010-ல் ஒரு அறிக்கை வெளியிட்டது. காஸ்ஸா முற்றுகை என்பது “தெள்ளத் தெளிவான, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய கூட்டுத் தண்டனையாகும்.” என கூறியது. ஆனால் பி.பி.சி. யோ செஞ்சிலுவை சங்கம் காஸ்ஸாவைப் பற்றி கூறும் அறிக்கையில் காஸ்ஸாவின் மிகக் கடும் சூழலை மிதமாக காட்டி வருகிறது. ’ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே மின்சாரம் இல்லை எனவும், மருத்துவமனையில் ஒரு சில மருந்துகளே கிடைக்கவில்லை’ என கூறி இருட்டடிப்பு செய்கிறது.

பிற்காலத்தில் பலஸ்தீன் என்றொரு நாடு அங்கீகரிக்கப்பட்டால் அது இஸ்ரேலுக்கும், ஜோர்டானுக்கும் இடையே மட்டுமே அமைந்திருக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் காஸ்ஸாவிற்கும் மேற்கு கரைக்கும் இடையேயுள்ள தொடர்பை 1991-லிருந்தே பிரிக்க வேண்டும் என்ற கொள்கையை, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடைபிடித்து வருகின்றன. 1993ஆம் ஆண்டு பலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) இஸ்ரேலும் செய்து கொண்ட ஓஸ்லோ ஒப்பந்தமும் இதனை வலியுறுத்துகின்றது.

இஸ்ரேல் செய்துவரும் முற்றுகையை எதிர்க்கும் விதமாக, காஸ்ஸாவில் அவதியுறும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய வந்த சுதந்திரக் கப்பல் (Freedom Flotilla) களை தாக்கியதன் மூலம் அமெரிக்க இஸ்ரேல் எதிர்ப்பிற்கான சூழல் ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்காவினைத் தவிர்த்து உலக நாடுகள் அனைத்தும் சுதந்திரக்கப்பல்-1ஐ தாக்கியதற்கு எதிராக் கண்டனைக் குரல்களை எழுப்பின. இம்முற்றுகையில் மட்டும் இஸ்ரேலின் க்மாண்டோக்கள் தாக்கியதால் 9 பயணிகள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலியர்களில் பெரும்பாலோர் இஸ்ரேலியக் கமாண்டோக்கள் அப்பாவிகள் என்றும் கப்பலில் இருந்தவர்கள் தாம் கமாண்டோக்களைத் தாக்கினார்கள் என்றும் நம்புகிறார்கள். இது இஸ்ரேலிய சமூகம் பகுத்தறிவின்மையால் சுயமாக அழிந்து போகும் நிலையின் ஒரு அறிகுறியாகும்.

தற்பொழுது அமெரிக்காவும் இஸ்ரேலும் ப்ளோட்டில்லா கப்பல்களை காஸ்ஸாவை அடைய விடாமல் தடுக்க கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. “இஸ்ரேலியர்கள் தங்களைத் தாங்களேப் பாதுகாத்துக் கொள்வது என்பது அவர்களின் உரிமை” என்று அமெரிக்கஸ் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கூறியதன் மூலமாக் கிட்டதட்ட வன்முறைக்கு அங்கீகாரம் வழங்கிவிட்டார். “இஸ்ரேலின் கடல் எல்லையில் நுழைவதன் மூலமாக…” என்று கூறுவதன் மூலம் காஸ்ஸாவின் கடல் எல்லையை இஸ்ரேலின் கடல் எல்லை என்றும், காஸ்ஸா இஸ்ரேலின் ஒரு பகுதி என்றும் சொல்லாமல் சொல்கிறார்.

காஸ்ஸாவிற்கு புறப்படும் எந்த ஒரு படகுகளையும் கிரீஸ் தடுக்கும் என்று கிரீஸ் அரசு அறிவித்துள்ளது. ஒன்று மட்டும் சரி. கிரீஸோ கிளிண்டனைப் போல் ‘இஸ்ரேலின் கடல் எல்லைக்குள் செல்லும் படகுகள் என்று சொல்லாமல் காஸ்ஸாவின் எல்லையை நோக்கி புறப்படும் படகுகள்’ என்று அறிவித்தது. 2009 ஆம் ஆண்டு அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிய ஆயுதங்களை கிரீக் துறைமுகம் வழியாக அனுப்புவதை மறுத்த கிரீஸ் தற்பொழுது இவ்வாறு கூறியிருப்பது ஏனெனில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் அமெரிக்காவிற்கு எதிராக எதனையும் செய்ய இயலாததே காரணமாகும்.

ஐ.நா.வின் நிவாரணம் மற்றும் பணிக்கான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிர்ஸ் குன்னஸ் அவர்களிடம், “ப்ளோட்டிலாக்கள் பிரச்சனைகளை தூண்டுபவைகளா?” என்று கேட்கப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்:

“அங்கு (காஸ்ஸாவில்) மனிதாபிமானத்திற்கான நெருக்கடி இல்லாதிருந்தால், காஸ்ஸாவின் வாழ்கையின் ஒவ்வொரு   அம்சத்திலும் நெருக்கடி இல்லாதிருந்தால் ப்ளோட்டிலாக்கள் தேவையில்லை. காஸ்ஸாவில் இருக்கும் நீரில் 95% குடிப்பதற்கு தகுதியற்றவை. காஸ்ஸாவில் ஏற்படும் நோய்களில் 40% நீரினால் ஏற்படும் நோய்களாகும். 45.2% மக்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். 80% மக்கள் உலகிலிருந்து வரும் உதவியின் மூலமே வாழ்கின்றார்கள்.

காஸ்ஸா முற்றுகை துவங்கியதிலிருந்து ஏழைகளின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளது. காஸ்ஸா முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்தால் ப்ளோட்டிலாக்கள் அவசியமில்லாமல் போகும்” என்று காஸ்ஸாவின் அவல நிலையைப்பற்றி விவரிக்கிறார்.

வன்முறைகளின் ஏகபோக அதிகாரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு, பலஸ்தீனிய அரசின் திட்டங்களும் அறவழி நடவடிக்கைகளும் பெரும் முட்டுக் கட்டைகளை கொண்டு வந்துள்ளன அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது நிலைப்பாட்டிலிருந்து (ஆக்ரமிப்பு, அதற்கான சதிகள்) மாற்றிக் கொள்ளவே இல்லை எனலாம்.

(நோம் சோம்ஸ்கி-மாசேசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு டஜன் புத்தகங்களுக்கு மேலாக எழுதியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.)

நோம் சோம்ஸ்கி
தமிழில் இஸ்மாயீல்.

Related

tsunami 7692582554922974106

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item