மாணவர் சமுதாயத்தில் ஊடுறுவும் சங்பரிவார்

http://koothanallurmuslims.blogspot.com/2009/12/blog-post_21.html
இந்திய நாட்டின் அனைத்து துறைகளிலும் இன்று சங்பரிவார் சக்திகள் ஊடுறுவி உள்ளன. தொடர்ச்சியான திட்டமிட்ட வழிமுறைகளைக் கையாண்டு அரசு அதிகாரம், ஊடகத்துறை, காவல் துறை, இராணுவம், நீதித்துறை என சகல துறைகளிலும் ஊடுறுவியுள்ள இந்துத்துவ மதவாதம், நாட்டின் எதிர்காலத் தலைவர்கள் என்று கூறப்படும் மாணவ சமுதாயத்தையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டு மென்றால், இந்து மாணவர்களை சங்பரிவார் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைப்பதற்கு பல்வேறு பெரும் முயற்சிகள் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்ட 1925 முதலே நடை பெற்று வருகின்றன.
நாட்டில் நடந்த பல்வேறு அரசியல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகளுக்குப் பின்னால் இருந்த மாணவர் சக்தியின் பலத்தை உணர்ந்த இந்துத்துவ கும்பல் மாணவர் சக்தியை வளைத்தெடுக்க திட்டம் தீட்டினர். பல பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஷாகா பயிற்சி அளிக்கப்பட்டது. இளம் வயதில் எதையும் செய்து முடிக்கலாம் என்ற மனோதைரியமும், வீர சாகசங்களின் மீது ஆர்வமும் கொண்ட மாணவப் பருவத்தினரை, தனது ஷாகாக்களில் வீர விளையாட்டுக்கள் கற்றுக் கொடுப்பதன் மூலம் வசியப்படுத்தி முஸ்லிம் வெறுப்புணர்வை விதைக்கும் அரும் பணியை செவ்வனே செய்துவந்தது ஆர்.எஸ்.எஸ்.இல் ஏற்கனவே பணியாற்றி வந்த பார்ப்பன, உயர்சாதி பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் சங்பரிவார கொள்கைகளை பரப்புவதில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் ஒருவர் விஜயபாரதம் இதழில் எழுதிய தனது சுயசரிதையில் இதை கூறியிருக்கிறார்.
கல்லூரி ஆசிரியராக இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஷாகாவுக்கு வரும் மாணவர்களுக்கு செயல்முறை வகுப்புகளுக்கு அதிக மதிப்பெண் அளித்தும், விடுப்பு அளித்தும் உதவியிருக்கிறார். இதனால் மாணவர்கள் ஷாகாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினார்களாம்.
இதுபோன்ற குறுக்கு வழிகளில் மாணவர்களிடையே உட்புகுந்த சங்கும்பல் 1961ல் A.B.V.P. (அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) எனும் அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பை உண்டாக்கியது. இதன் மூலம் நாட்டின் பல் வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுறுவியது. இடதுசாரி, புரட்சிகர சிந்தனைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டுவந்த மாணவர் சமூகம் தீவிர வலதுசாரி பார்ப்பனீய கருத்துக்களுக்கும் செவிசாய்க்க ஆரம் பித்தது S.F.I போன்ற இடதுசாரி மாணவர் இயக்கங்களின் கோட்டையாக இருந்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்தல்களில் வெற்றிபெறும் அளவுக்கு இந்த A.B.V.P. வளர ஆரம்பித்தது.
மாணவர் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு பணத்தையும், இதர வஸ்துக்களையும் இறக்கி விடுவதோடு, வன்முறையில் இறங்குவதற்கும் A.B.V.P. தயங்குவதே இல்லை. மத்தியப் பிரதேசத்தில் தங்கள் அமைப்பு கல்லூரித் தேர்தல் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கல்லூரிப் பேராசிரியர் சபர்வாலை குத்திக் கொலை செய்த A.B.V.P நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கல்லூரிகளில் வன்முறையில் ஈடுபட்டதாக பல A.B.V.P. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரளா, டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் என மாணவர்களை தங்கள் விஷ வலையில் வளைத்துப் போட்டு விசுவரூபம் எடுத்து வருகிறது A.B.V.P.
தமிழகத்தில் பெரிய அளவில் இவர்களால் வளர முடியவில்லை என்றாலும், சிறுபான்மைக் கல்லூரிகளில். பள்ளிகளில் கிளை பரப்ப முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை பச்சையப்பன் கல்லூரியை தளமாகக் கொண்டு இயங்கிவரும் A.B.V.P.யால் சென்னை கல்லூரிச் சுவர்களில் JOIN A.B.V.P. என்று எழுதுமளவுக்குத்தான் இயக்கத்தைக் கொண்டு செல்ல முடிந்திருக்கின்றது. எனினும் மாணவர்களிடையே இயக்கத்தைக் கொண்டு செல்வதில் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது A.B.V.P.
கல்வி நிறுவனங்களை நடத்தும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் கவனமாக இருக்க வேண்டிய அதேநேரத்தில், சமுதாய அமைப்புகள், மாணவர் அமைப்புகளை வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும். அமைப்புகளின் ஓர் அணி என்றில்லாமல் மாணவர் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் சுயேச்சையான அமைப்பாக மாணவர் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும். இளம் வயதிலேயே கொள்கைத் தெளிவும் போராட்டக் குணமும் கொண்ட ஓர் தலைமுறையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் காவிகளின் ஆக்டோபஸ் கரங்களை அறுத்தெரிய முடியும்.