பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில தலைவர்கள் மாநாடு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்கள் மாநாடு கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் தேனியில் வைத்து நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிளைத்தலைவர்கள் என நூற்றுக்கணக்கான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

17ஆம் தேதி காலை சரியாக 10 மணி அளவில் மர்ஹீம் ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ் திடலில் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி இம்மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச்செயலாலர் சகோதரர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணைத்தலைவரும், விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியருமான எம். முஹம்மது இஸ்மாயில் அவர்கள் புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்தார். இந்த கண்காட்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை விவரிக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப், எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்டின் துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் மற்றும் துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

இம்மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் மனோதத்துவம் பற்றி உரை நிகழ்த்தி பின்னர் இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
ஞாயிறு மாலை சரியாக 6.00 மணி அளவில் இம்மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இம்மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:

1. அரசு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு பல்வேறு நலப்பணிகள் அறிவித்திருந்தாலும் இத்திட்டத்திட்டங்களில் பயன்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்வதில் தேக்க நிலையே ஏற்பட்டுள்ளது. பல சமயங்களில் இது போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தபடாமலேயே இருப்பதும் தெரியவருகிறது. மேலும் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் மிக குறைவாகவே உள்ளது. பல்வேறு அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறிப்பாக முஸ்லிம்கள் எத்தனை சதவீதத்தினர் இருக்கிறார்கள் என்ற வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்து துறைகளிலும் சக்திப்படுத்தும் இலக்கினை நோக்கி செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட், அரசு நலப்பணிகளை மக்களுக்கு கொண்டு செல்லும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

2. தியாகி இம்மானுவேல் அவர்களின் 54ஆவது நினைவு தினத்தில் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது. சூழ்நிலையை நீதியுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் கையாண்டிருந்தால் இத்தகைய துயர சம்பவம் நடைபெற்றதை தவிர்த்திருக்கலாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரித்து தேவையான பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காவல்துறை, ஒரு விதமான அராஜக போக்கை கடைபிடித்துள்ளது. தமிழக முதல்வர் இத்தகைய அராஜக போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் அமைதிப்பூங்காவான தமிழகம் மீண்டும் அமளிக்காடாக மாறும் அபாயம் உள்ளது என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் இத்தருணத்தில் குறிப்பிடுகிறது. நடந்த சம்பவத்தை முறையாக நீதி விசாரணைக்குட்படுத்தி தகுந்த நியாயம் வழங்குவது தான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க முடியும் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவிக்கிறது.

3. மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் வாழக்கூடிய எல்லாதரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் டெல்லியில் வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய‌ இரு தினங்கள் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு" ஒன்றை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமை முடிவுசெய்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் வழியாக மாநாட்டினை விளம்பரப்படுத்த உள்ளோம். இதன் மூலம் மாநாட்டின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி பிரச்சாரம் செய்யப்படும். இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

4. குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருப்பது அரசியல் இலாபத்திற்காகவும் மக்களை திசை திருப்பும் செயலுக்காகவுமே அன்றி வேறில்லை. தொடர்ந்து பல அதிகாரிகள் மோடியை குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட்ட காரணமானவர் என்று குற்றம் சாட்டியிருக்கும் நிலையிலும், பல குழுக்கள் இது சம்பந்தமாக நடந்துவரும் வேளியிலும் அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தும் உண்ணாவிரதம் மக்களை திசைதிறுப்பும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும் இதே காலகட்டத்தில் குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியின் நிர்வாகத்தை பல நாடுகளில் இராணுவ நடவடிக்கை மூலம் பல அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்கா புகழ்ந்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக முதல்வர் மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் பிரதிநிதியாக இரண்டு நபரை உண்ணாவிரதத்திற்கே குஜராத்திற்கு அனுப்புவது சிறுபான்மையினரின் மனதை புண்படுத்துவதாக இருக்கிறது. மோடி தேசிய மதச்சார்பின்மை மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஹிந்துத்துவா கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர். நாட்டின் மதச்சார்பன்மை கொள்கையை கருத்தில் கொண்டு மோடியின் விஷயத்தில் தமிழக அரசு தன் அணுகுமுறையில் மறுபரிசீலனை செய்யவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

5. கடந்த தி.மு.க ஆட்சியின் அண்ணா பிறந்த நாளை ஒட்டி 7 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த 1405 ஆயுள் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதில் முஸ்லிம் கைதிகள் மட்டும் பாரபட்சமாக விடுதலை செய்யப்படாமல் மிகப் பெரும் அநீதி நடைபெற்றது. ஆதிமுக அரசு சிறைவாசிகளின் விஷயத்தில் நடந்த மிகப்பெரும் அநீதியை சரிசெய்ய வழிவகை செய்யும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் ஏக்கத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழக அரசு பொது மன்னிப்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யாதது சிறைவாசிகளின் குடும்பங்கள், முஸ்லிம் சமூகம், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் காலத்திலாவது தமிழ அரசு இதனை பரிசீலனை செய்து சிறைவாசிகள் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டு கொள்கிறது.

6. நம் தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையிலும், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உறுதிபூண்டு செயல்படவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடா வருடம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. நம் முன்னோர்கள் சுதந்திரம் வாங்கும் போது நம் தேசத்தை பற்றி கண்ட கனவான சமூக நீதி மற்றும் சம நீதி, ஊழலில்லா ஆட்சி போன்ற இலட்சியங்கள் இன்று புதைக்குழியில் தள்ளப்பட்டுள்ளது. நாட்டை அடகுவைக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வெளியுறவு கொள்கைகள் நம் தேசத்தின் வளர்ச்சிக்கே பெரும் சவால்களாக உள்ளது. இத்தகைய சூழலை மாற்றி அமைத்து நம் தேசத்தை, நம் முன்னோர்களின் கனவின் அடிப்படையில் சம நீதி, மதச்சார்பின்மை போன்ற ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, நாட்டை சக்தி படுத்த வேண்டி கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வருடம் அரசு அனுமதியளிக்காததை உரிமை மறுப்பாகவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. கடந்த கால திமுக ஆட்சியில் 2008 ஆம் வருடம் இந்நிகழ்சியினை கொண்டாட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் நடத்தினோம். 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் கடந்த திமுக அரசியல் காவல்துறை அனுமதியுடன் எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். சிறுபான்மை சமூகம் நடத்தி வரும் ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை தேவையில்லாத அனுமானங்களை ஏற்படுத்தி பலவிதமான நெருக்கடிகளை கொடுப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சமூகத்தின் நியாயமான உரிமைகளை அதிகார துஷ்பிரயோகத்தால் தடுக்கும் தமிழக காவல்துறையின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறது இம்மாநாடு. உண்மையான ஜனநாயக கொள்கையை சக்திபடுத்த, நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட நீதிமன்றத்திற்கு செல்லும் நிலைக்கு சிறுபான்மையினர் தள்ளப்படுவதே இங்கு சமூக நீதி மற்றும் சம நீதி, மதச்சார்பின்மை புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பதை பறைசாற்றுகிறது. சுதந்திரம் நமது பிறப்புரிமை, அதை யார் தடுத்தாலும் அனுமதியோம் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் தன் உரிமைக்காக நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் இதனை எடுத்துச்செல்லும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

7. அக்டோபர் மாதம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பிரதிநிதியாக‌ வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ எடுக்கும் முடிவுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் வெற்றி பெற பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் முழுமையாக களப்பணி ஆற்றுவார்கள் என்பதை இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது. எஸ்.டி.பி.ஐ வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சமுதாய மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

8. நாட்டில் அனைத்து துறைகளையும் ஊழல் ஆக்கிரமித்துள்ளது. காங்கிரஸ் அரசில் மாத்திரம் அல்ல கடந்த பா.ஜ.க ஆட்சியிலும் இதே நிலையே நீடித்தது. தற்போது பா.ஜ.க ஆட்சி செய்கின்ற கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இதே நிலையே நீடிக்கிறது. தங்களது ஊழலை மறைக்கவும், உள்கட்சி பூசலை மறைக்கவும் மக்களிடம் இழந்து போன ஆதரவை மீட்கவும் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தவிருப்பதாக பா.ஜ.க அறிவிப்பது கேலிக்குறியது. ஏற்கனவே அத்வானியின் ரத யாத்திரை வன்முறை யாத்திரையாக மாறி போனதை மத்திய அரசும் மாநிலம் அரசும், நாட்டு மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்களை ஏமாற்றும் இந்த ரதயாத்திரையை பா.ஜ.க கைவிடக்கோரி நாட்டு மக்கள் அரசிற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

Related

SDPI 5872087676804519361

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item