மருதநாயகம் முகம்மது கான் சாஹிப்

இந்தியாவில் சுதந்திற்கு போராடிய முஸ்லிம் போராளிகள் பலர் இருகின்றனர்.அதிகமான போராளிகள் துரோகிகளின் மூலமே ஆங்கிலேயர்களால் கொல்லபட்டனர் .அப்படிபட்ட போராளிகள் இருக்கும் பொழுது ஆங்கிலேயர்களால் இந்தியாவை கைப்பற்றுவது கேள்வி குறியானது?அப்படி பட்டவர்களின் ஒருவர் தான் இந்த மாவீரன் கான் சாஹிப். ஏன் இப்பொழுது உள்ள மக்கள் இவரது தியாகத்தை நினைப்பதில்லை,மேலும் ஏன் வரலாற்றில் இருந்து இவரை மறைக்க முயல்கின்றனர்.கோழையாக இருந்தவர்கள் ,நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று போற்ற படுகின்றனர் ஆனால் உண்மையான போராளிகள் மறைக்க படுகின்றனர். ஏன் இந்த பாகுபாடு.அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணமோ?இனியாவது விழிக்குமா வரலாறு ?மேலும் இவரை போற்றும் விதமாக மதுரை விமான நிலையதிற்கு இவரது பெயரை வைக்குமா அரசாங்கம் ? இனி இவரது சாதனைகளை பார்ப்போம் .

சிவகங்கை அருகே உள்ள பனையூர் என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம்பிறந்தார். மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம்,கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.

இவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.

1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.

வளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும் :

சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.மருத்துவர், தையல் தொழிலாளி,படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.

தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம் :

பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.

இவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.

ஆற்காடு நவாப்

யார் ஆற்காடு நவாப்?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும் , பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப் :

ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.

கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.

ஹைதர் அலி

வீரமும் – பரிசும்

மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!

அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.

நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752 ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.

ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.

இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.


இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.

மனம் மாறிய மருதநாயகம் :

திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்! சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா? உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-?இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை,சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும்? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

மதுரைப் போர்!

முடியாது! முடியவே முடியாது! ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல…உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!

1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது! போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார்! எதிரிக்கு எதிரி நண்பன்! பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.

தக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி , தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.

ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.

ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும்,கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள்! அதனால் பயம் அதிகரித்தது! காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே நடந்தது! மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின! ரத்தம் கொட்டின! ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.

பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.

தந்திரம்! வஞ்சகம்!

ஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க”என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது! இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்! துரோகிகளை விலை பேசினான்!

இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன.1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’!

மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு,ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே!

நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை,இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.

அச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.

போரில் உறுதி

கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.

ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில்,தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம்! கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.

இறுதி யுத்தம்

ஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர்.31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.

ஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.

ஹைதர் அலியின் உதவி

முன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.

“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)

பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.

சீறினார்… மோதினார்!

உற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!

அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.

தந்திரம்

போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும்,வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.

மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால்,பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.

சூழ்ச்சி வென்றது…

மருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும்? அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில்! இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்!

அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள்.13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.

அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி,ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.

விசாரணை

சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.

மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.

தூக்குக் கயிறை முத்தமிட்டார்

15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்!

அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. தூக்குக் கயிறை (மரணத்தை) முத்தமிட்டார்.

மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.

தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும்,வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது! எனவே, எடை தாங்கவில்லை!

புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.

இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.

தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!

மருதநாயகம் அடக்கஸ்தலம்

அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும்,உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன்,ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?

Related

முக்கியமானவை 2797222319035058137

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item