எகிப்து மக்களை பாராட்டுவோம்! அவர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

புகழ்பெற்ற நாடான எகிப்து வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தலைநகரம் கெய்ரோவாகும். இங்கு வரலாற்று சிறப்புமிக்க அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் பல வரலாற்று ஆய்வாளர்களையும், மார்க்க அறிஞர்களையும், வரலாற்றை மாற்றி அமைத்த தலைவர்களையும், புரட்சிக்கு வித்திட்ட இமாம் ஹஸனுல் பன்னா, செய்யித் குதுப் போன்றவர்களை உருவாக்கிய பெருமை அந்த பல்கலைக்கழகத்தை சாரும்.

வரலாற்று சிறப்புமிக்க தேசமான எகிப்தைப் பொறுத்தவரை உலகின் 15வது மக்கள் தொகை கொண்ட நாடாகும். எகிப்து மேற்கே லிபியாவையும், தெற்கே சூடானையும், கிழக்கே காசாக் மற்றும் இஸ்ரேலையும் எல்லையாக கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. ஆகும். வடக்குக் கரையில் மத்திய தரைக்கடலும் கிழக்குக் கரையில் செங்கடலும் எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் ஜீவ நதியாக பிரசித்திப்பெற்ற நைல் நதி பாய்கிறது.

இப்படி வரலாற்று சிறப்புமிக்க தேசமான எகிப்து இன்று இரத்த கறைபடிந்த வீதிகளாக மாறிக்கொண்டிருக்கின்றது. காரணம், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முஹம்மது முர்ஸி ராணுவத்தால் பொய்யான காரணத்தைக் கொண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தை நிலைவாட்டுவதில் எகிப்து மக்கள் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் அர்ப்பணிக்க தயாராகி விட்டார்கள் என்பதை அவர்களின் உயிர் இழப்புகளும், வீதிகளில் நிறைந்திருக்கும் மக்கள் வெள்ளமும் சாட்சியாகும்.

அவர்களுடைய கைகளில் முர்ஸியின் புகைப்படமும், முர்ஸிக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்ற வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியவாறு தினமும் சமூக வளைதளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவைகளில் வந்த வண்ணம் உள்ளனர். இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கெதிராகவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரியும், இராணுவத்தின் அடக்குமுறைக்கெதிராக பல்வேறு இடங்களில் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. மக்களை ஒடுக்க இராணுவம் தினமும் துப்பாக்கிச் சூடு, கொடூரமான தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என கொல்லப்படுவது அதிகமாகி கொண்டே செல்கின்றது. இது முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திக்கின்றது.

உலக மக்களின் ஆதரவுகள்

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது, இராணுவம் மற்றும் காவல்துறையின் கொடூரத் தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு முழு உலகத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை பல்வேறு நாடுகள் கண்டித்திருந்தபொழுதிலும் இராணுவத்தின் அடக்குமுறைகள் குறைந்தபாடில்லை. துப்பாக்கிச் சூடுகளும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி விட்டன. இதனைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

நியூயார்க் நகரத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.நா.வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இராணுவம் மற்றும் காவல்துறைக்கு எந்தவித உதவிகளையும் வழங்கக்கூடாது என்று உலக நாடுகளை ஐ.நா. வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒபாமா அரசு இராணுவத்துக்கு வழங்கி வரும் பொருளாதார உதவிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கியமான பேச்சாளர்கள், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு எகிப்து இராணுவத்துக்கெதிராக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். கனடா நாட்டில் டொரன்டோவில் உள்ள பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு அதிபர் முர்ஸியின் முன்னாள் ஆலோசகர் அஹமது எலிமாம் (கனடா நாட்டு எகிப்தியர்) தலைமை வகித்தார். இதில் டாக்டர். யாஸர் ஹதாரா, டாக்டர். வைல் ஹதாரா, இஸ்மாயில் லாட்னி மற்றும் கனடா நாட்டு எகிப்திய செயல்பாட்டாளர்கள், தற்பொழுது எகிப்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், துருக்கி, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினார்கள். மிஸ்ஸகு, ஸ்கோர்போ, டவுண் டொரன்டோ மற்றும் துரோன்கிலிப் பார்க், ஈஸ்ட் யார்க் டொரன்டோ ஆகிய இடங்களில் இருந்து ஆதரவாளர்கள் வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். உரையாற்றிய தலைவர்கள் அரசு இந்த ராணுவத்தின் கொடூரத் தாக்குதலை கண்டிக்குமாறு அரசை வலியுறுத்தியும் மற்றும் கனடா அதிபர் இந்தக் தாக்குதலுக்கு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்யக்கேரியும் அரசைக் கேட்டுக் கொண்டனர். மேலும், எகிப்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை தடுத்து நிறுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எதிப்தில் பாதிக்கப்பட்டவர்களை சித்தரிக்கும் புகைப்படங்கள் மற்றும் எகிப்து, கனடா நாட்டு கொடிகளை தங்களுடைய கைகளில் ஏந்தியவாறு நின்றனர். எகிப்தில் இராணுவத்தின் தாக்குதலில் கனடா நாட்டு எகிப்தியரான அம்ர் காசிம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் நடைபெற்ற பேரணியை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஏற்பாடு செய்ததில் முர்ஸியின் ஆதரவாளர்கள் 500க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு எகிப்து இராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எகிப்தின் ஜனநாயகத்தை கொலை செய்து கொண்டிருக்கும் இராணுவ தளபதி அப்துல் பதாஹ் அல் சிசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிபர் கேமரூன் அவர்களை கேட்டுக் கொண்டனர். மேலும், பாகிஸ்தானில் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெருவாரியான இடங்களில் ஜமாத்தே இஸ்லாமி சார்பாக எகிப்து இராணுவத்திற்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதேப்போல், இந்தியாவிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. எகிப்தின் ராணுவக்கொடுங்கோன்மைக்கெதிராக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

அதிகமாக பேசப்படும் நாடும், அதிகமாக பேசப்படும் பெயரும்

தற்பொழுது உலகில் அதிகமாக உச்சரிக்கக்கூடிய நாடாக எகிப்தும், அதிகமாக பேசப்படக்கூடிய பெயராக முஹம்மது முர்ஸியும் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது. 2010ன் இறுதியில் துனீசியாவில் துளிர்விட ஆரம்பித்த மக்கள் எழுச்சி வேகமாக அண்டை நாடுகளையும் அரவணைத்துக் கொண்டது. மக்களின் இந்த எழுச்சி “அரபு வசந்தம்” என்று உலகம் முழுவதும் பேசப்பட்டது. துனீசியாவை தொடர்ந்து எகிப்திலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். காவல்துறையின் கொடுஞ்செயல்கள், நெருக்கடி நிலைச் சட்டங்கள், வேலையின்மை, குறைந்த ஊதியம், உணவு பொருட்களின் விலை உயர்வு, அரசியல் ஸ்திரத்தன்மை, ஊழல், பேச்சுரிமை மறுக்கப்படுதல், மோசமான வாழ்நிலை போன்ற காரணங்களால் எகிப்து மக்கள் கொந்தளித்தனர். அதை வெளிப்படுத்தவும் செய்தனர்.

புகழ்பெற்ற தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கலைக்க எகிப்து ராணுவம் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப் புகை குண்டுகள், நீரை பாய்ச்சி அடித்தல், லத்தி சார்ஜ் என்று அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எந்தவித கஷ்டங்களுக்கும் மக்கள் தங்களுடைய போராட்டங்களை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனவரி 25, 2011 ஏற்படுத்திய புரட்சியில் 30 ஆண்டுகாலம் சர்வாதிகார ஆட்சி செய்து கொண்டிருந்த முபாரக்கின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. இது, அங்கு ஜனநாயகத்தின் பாதையை திறந்து விட்டது. ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடத்தப்பட்டது. எகிப்தில் பல்வேறு மாற்றங்களுக்கும், புரட்சிக்கும் பெயர்போன இயக்கமான முஸ்லிம் சகோதத்துவ அமைப்பின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸி போட்டியிட்டு மக்களின் பேராதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வின் மூலம் எகிப்து, ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.

ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்ற சந்தோஷம் ஒருபக்கம், மறுபக்கம் மற்ற அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு அச்சம் ஒருபக்கம். முபாரக்கின் சகாப்தம் முடிவுக்கு வந்தது அமெரிக்க, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்டது. ஏனென்றால், முபாரக் போன்றவர்களின் சர்வாதிகார ஆட்சி, அமெரிக்க, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு தங்களது இஸ்லாமிய எதிர்ப்பை வலுப்படுத்த ஒரு காரணியாக இருந்து வந்தது. முபாரக்கின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு நெருக்கடி கொடுப்பது, பர்தா அணிவதை தடை செய்தது, மேற்கத்திய கலாச்சாரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, மக்களின் ஆடம்பர வாழ்ககையை ஊக்குவிப்பது என்று மக்கள் விரோதப்போக்குடன் செயல்பட்டு வந்தார் ஹோஸ்னி முபாரக்.

அதுமட்டுமல்லாமல், திறமையற்ற நிர்வாகம், வறுமை, பஞ்சம், ஊழல் என்று தலைவிரித்தாடியது. அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதில் தஹ்ரீர் சதுக்கத்த்தில் கூடிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடத்தியதற்கும், பல்வேறு ஊழல் வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முபாரக் ஆட்சியில் பிரதமரான அகமது ஷபீஃக் மற்றும் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டியின் முகம்மது முர்ஸி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் முர்ஸி வெற்றி வாகை சூடினார். ஜனநாயக ரீதியில் எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக ஜூன் 30, 2012 அன்று முர்ஸி பதவியேற்றார்.

இந்த நிகழ்வு மொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது எனலாம். ஆம்! எகிப்தில் ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாமலும், ஜனநாயக முறையான தேர்தல்கள் என்றால் அறியாமலும் இருந்த எகிப்தில் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்ற பெருமையை முஹம்மது முர்ஸியை தவிர வேறுயாரும் பெற்றதில்லை. முர்ஸி பதவியேற்றவுடன் நட்புறவு ரீதியாக பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் அடிப்படையில் இந்தியாவிற்கும் வருகை புரிந்தார். கடந்த மார்ச் மாதம் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருகை புரிந்து பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையே நட்புறவை மேலும் அதிகப்படுத்துவதாக அமைந்தது.

இப்படி உலக அளவிலும் நாட்டினுடன் நட்புறவோடு எகிப்தை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த அதிபர் முஹம்மது முர்ஸி, அவருக்கெதிராக இராணுவம் செய்த சதிகளை அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. மறைமுகமாக வேலை செய்துகொண்டிருந்த தீய சக்திகள் அவருக்கெதிராக மக்களை தூண்டி விடுவதில் கவனமாக இருந்தனர். இது அவரை பதவியில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. குறிப்பாக, எல்பரேடி போன்றவர்கள் இஹ்வான்கள் ஆட்சிக்கட்டிலில் இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எகிப்தின் மக்கள் இஹ்வான்களின் ஆதரவாளர்களாக மாறிவிடுவார்களோ என்று அச்சத்தில் இருந்தனர். இது எதிர்காலத்தில் தங்களுடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற காரணம் அவர்களை தூக்கத்தை தொலைக்க வைத்துவிட்டது.

இதை நிறைவேற்ற மக்கள் புரட்சி என்ற பெயரிலேயே நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வேரூன்றி இருந்தது. இது தான் ஜூன் 30 அன்று தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்ட மக்கள் முர்ஸிக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது உலககெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் திரண்ட மக்கள் “முர்ஸி பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைத்தனர். ஆனால், இது சுயமாக மக்கள் திரளவில்லை. இராணுவம் மற்றும் அதிகார மையங்களில் முபாரக்கின் கைக்கூலிகளின் ஏற்பாட்டால் திரண்ட மக்கள் கூட்டம் என்பதை பின்நாட்களில் மக்கள் உணர்ந்தனர். இதை காரணம் காட்டி இராணுவம் முர்ஸியை கைது செய்து மறைமுகமாக வைத்திருந்தது. அவரை எங்கு வைத்திருக்கின்றோம் என்றுகூட அறிவிக்காமல் எகிப்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

முர்ஸிக்கெதிராக போராடிய மக்கள் ஓரிரு நாட்களில் தங்களுடைய இருப்பிடங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால், முர்ஸிக்கு ஆதரவாக போராடிய மக்கள் தொடர்ந்து தஹ்ரீர் சதுக்கம், ரபா அல் அதாவியா, கெய்ரோ பல்கலைக்கழகம் போன்ற பிரசித்த பெற்ற இடங்களில் தங்களுடைய இருப்பிடங்களை அமைத்து போராடிக் கொண்டே இருந்தனர். இதை சி.என்.என். மற்றும் ஐ.பி.என். போன்ற சேனல்கள் ஒளிபரப்பின.

இவர்கள் இராணுவத்திற்கெதிராக பிரதான முழக்கமாக, முர்ஸியை விடுதலை செய்! மீண்டும் முர்ஸியை பதவியில் அமர்த்து! என்ற கோரிக்கை முன்வைத்து இன்றும் போராடி வருகின்றனர். இதை கிஞ்சிற்றும் செவிசாய்க்காத இராணுவம் தங்களுடைய இராணுவ கொடுங்கோன்மையை நிகழ்த்தி வருகிறது. தற்காலிக அதிபராக ஹசம் எல் பெப்லாவியை நியமித்தது. துணை அதிபராக எல்பரேதி நியமிக்கப்பட்டார். இதைப்பற்றி எகிப்தில் வெளிவரும் அல் அஹ்ரம் பத்திரிகை இடைக்கால அதிபர் ஹசம் எல் பெப்லாவி கூறியதாக செய்தி வெளியிட்டிருந்தது, 70 சதவீத அமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பதவிகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று. இதில் எல்பரேதி முழுமையான முபாரக்கின் நலம் விரும்பியாவார். இவரை பதவியில் அமர்த்துவதில் அமெரிக்க, இஸ்ரேல் போன்ற நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன.

இவர்கள் இராணுவத்தை தங்களுடைய இஷ்டத்திற்கு பயன்படுத்த தொடங்கினர். மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்பட்டனர். அதேப்போல், இந்த போராட்டத்தை வழிநடத்தி சென்று கொண்டிருந்த இஹ்வான்களின் தலைவர்களை கைது செய்து ரகசிய இடங்களில் வைத்தனர். அவர்களுக்கு கொடுமையான சித்திரவதைகளையும் கொடுத்தனர். அவர்களுடைய குடும்பங்களை தொந்தரவு படுத்திக் கொண்டே இருந்தனர். இதை உலக நாடுகள் கண்டும் காணாதது போல் இருந்தன. அமெரிக்கா போன்ற நாடுகள் எகிப்து இராணுவத்திற்கு பொருளாதார உதவிகளை செய்து வந்தனர்.

ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு மக்களின் போராட்டம் ஓய்ந்து விடும் என்று இராணும் மற்றும் உலக நாடுகள் நினைத்தன. ஆனால், போராட்டம் நாட்கள் செல்ல செல்ல வீரியம் பெற்று வந்ததே தவிர, சிறிதளவும் குறையவில்லை. அதே நேரத்தில் மக்களின் உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன. இதன் பிறகுதான் ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்ய துவங்கின.

பல்வேறு நாடுகள் மற்றும் தலைவர்களின் கண்டனங்கள்

ஐரோப்பிய யூனியன் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்புகெதிராக தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல், ராணுவக்கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த முஹம்மது முர்ஸியை ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் காதரின் ஆஷ்டன் சந்தித்தார். அதேப்போன்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி கூறியதாவது, எகிப்திய அரசியலில் இருந்து இஸ்லாமியவாதிகளை ஒழிப்பதற்காக ராணுவம் இஹ்வான் தலைவர்களை தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றது என்று குற்றம் சாட்டியது.

சர்வதேச முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் அவையின் தலைவரும், பிரபல முஸ்லிம் மார்க்க அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் கூறும்பொழுது, சட்டவிரோதமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மது முர்ஸிக்கு எகிப்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முஹம்மது முர்ஸியின் மனைவி நஜ்லா மஹ்மூத் ஈகைப் பெருநாள் தொழுகைக்குப் பிறகு கெய்ரோவின் நஸ்ர் நகரத்தில் நடந்த போராட்டத்தில் அவர் பங்கேற்றார். அவர் கூறுகையில், எனது கணவர் விரைவில் திரும்ப வருவார். அல்லாஹ் கருணை புரிவான். நல்ல செய்தி வருவிருக்கிறது. எகிப்து இஸ்லாமியவாதிகளின் ஆட்சியின் கீழ் வரும்’ என்றார்.

எகிப்து போராட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முக்கிய தலைவர்களின் மகன், மகள், உறவினர்கள் என பல பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல்களில் கொலை செய்யப்பட்டுள்ள முக்கியமான நபர்களில் சிலர்:

  •     அஸ்மா அல் பெல்தாகி: இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான முகம்மது பெல்தாகியின் 17 வயது மகள். (குறிப்பு: தனியார் தொலைக்காட்சி சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட துருக்கி அதிபர் எர்துகானிடம், அஸ்மாவுக்கு அவரது தந்தை எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. கடிதத்தை படிப்பதை கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்துகான், பின்னர் கண்ணீரை துடைத்துவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார்)

  •     ஹபீபா அகமது: அதிபர் முர்ஸியின் ஊடக ஆலோசகர் அகமது அப்துல் அஜீஸின் மகள். ஐக்கிய அரபு அமீர பத்திரிகையில் பணியாற்றியவர்.

  •     ஹஃப்ஸா: இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் துணைத்தலைவர் ஹைரத் அல் ஷாத்தாரின் மகள். ஹஃப்ஸாவின் கணவர் முஸ்தஃபா ஹஸனும் கொலை செய்யப்பட்டார்.

  •     அம்மார் அல் பதீய்: இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் தலைவர் முகம்மது அல் பதீயின் மகன்.

  •     காலித் அல் பன்னா: இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் ஸ்தாபகர் ஹஸன் அல் பன்னாவின் பேரன்.

  •     தமீர் அப்துல் ரவூஃப்: எகிப்து அல் அஹ்ரம் நாளிதழின் சீனியர் எடிட்டர் (தடை உத்தரவு அமலில் உள்ள சமயம் செக்போஸ்டில் நிற்காமல் சென்றதற்காக இவர் இராணுவத்தால் சுடப்பட்டார்.

  •   பத்திரிகையாளர்களுக்கு தடை உத்தரவு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்).

  •     சமீஹ் அதாவி: எகிப்து கால்பந்தாட்ட வீரர்.


இப்படி பல உயிர்கள் ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்ட தங்களுடைய இன்னுயிரை நீத்த மக்களை பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்.

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “ (அவர்கள்) இறந்து விட்டார்கள் என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2: 154)

எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த மக்களுக்காக நாம் நம்முடைய ஆதரவுகளை அளிப்போம். நாம் எகிப்திய மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், பங்காளர்களாக மாறுவோம்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

“அன்றி, (இஸ்லாத்திற்கு விரோதமானச் செய்யப்படும்) கலகம் (முற்றிலும்) நீங்கி, மார்க்கம் அல்லாஹ்வுடையதாக உறுதிப்படும் வரையில் அவர்களை எதிர்த்து யுத்தம் புரியுங்கள். ஆனால், அவர்கள் (கலகஞ்செய்யாது) விலகிக்கொண்டால் (அவர்களிலும்) அக்கிரமம் செய்தவர்களைத் தவிர (மற்றவர்களைத் துன்புறுத்தி) வரம்பு மீறாதீர்கள்.”
(அல்குர்ஆன் 2: 193)

அனைத்து தளங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். எகிப்திய மக்களின் போராட்டம் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

நெல்லை சலிம்

Related

முக்கியமானவை 4645800266343006947

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item